Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இருபதாம் அதிகாரம்

‘நான் நம்புகிறேன்’

‘நான் நம்புகிறேன்’

1. மார்த்தாளின் துக்கத்தையும் அதற்குரிய காரணத்தையும் விவரியுங்கள்.

அன்பு சகோதரனின் கல்லறை... பாராங்கல்லால் மூடப்பட்ட குகை... இந்தக் காட்சிதான் மார்த்தாளின் மனக்கண்ணில் வந்துவந்து போகிறது. அந்தப் பாராங்கல்லையே தூக்கி வைத்தாற்போல் அவளுடைய நெஞ்சம் கனக்கிறது. உயிருக்கு உயிரான லாசரு இப்போது இல்லை என்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவர் இறுதி மூச்சை விட்டு நான்கு நாட்கள் ஆகின்றன. துக்கம் விசாரிக்க... இரங்கல் தெரிவிக்க... ஆட்கள் வந்துபோய்க் கொண்டிருக்க, அந்த நாட்கள் கண்ணீரும் கம்பலையுமாகவே கழிகின்றன.

2, 3. (அ) இயேசுவைக் கண்டவுடன் மார்த்தாள் எப்படி உணர்ந்தாள்? (ஆ) மார்த்தாளின் முத்தான வார்த்தைகள் அவளைப் பற்றி எதைச் சுட்டிக்காட்டின?

2 இப்போது, லாசருவின் ஆருயிர் நண்பரான இயேசு வந்திருக்கிறார்... மலைச்சரிவில் இருக்கிற சிறிய ஊரான பெத்தானியாவுக்கு வெளியே அவள்முன் நிற்கிறார். அவரைப் பார்த்தவுடன் அவளுக்குத் துக்கம் பீறிட்டு வருகிறது. இந்த உலகத்திலேயே தன்னுடைய சகோதரனைக் காப்பாற்றக்கூடிய ஒரே நபர் அவர்தான் என மலைபோல் நம்பியிருந்தாள். இருந்தாலும், அவரைப் பார்த்ததே அவளுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. அவருடைய கண்களில் தேங்கியிருக்கும் கருணை... அவர் காட்டுகிற ஆழ்ந்த அனுதாபம்... எப்போதும் போலவே இப்போதும் அவளுடைய இதயத்துக்கு இதமளிக்கிறது, மனதுக்கு உற்சாகமூட்டுகிறது. அவர் கேட்கிற சில கேள்விகள் அவளது விசுவாசத்தின் மீது... உயிர்த்தெழுதலில் அவள் வைத்திருக்கிற நம்பிக்கையின் மீது... அவளுடைய கவனத்தைத் திருப்புகின்றன. இயேசுவோடு பேசிக்கொண்டிருக்கிற அந்தத் தருணத்தில், அவள் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளிலேயே முத்தான வார்த்தைகளைச் சொல்கிறாள்; “நீங்கள்தான் கடவுளுடைய மகனாகிய கிறிஸ்து; நீங்கள்தான் இந்த உலகத்திற்கு வரவேண்டியவர் என்று நம்புகிறேன்” எனச் சொல்கிறாள்.​—யோவா. 11:27.

3 மார்த்தாள் விசுவாசத்திற்குப் பேர்போனவள் என்பதை இந்த வார்த்தைகள் எடுத்துக்காட்டுகின்றன. அவளைப் பற்றி பைபிளில் பதிவாகியுள்ள விஷயங்கள் சிற்சில, ஆனால் அவற்றில் பொதிந்துள்ள முக்கியப் பாடங்களோ பற்பல! அவை நம் விசுவாசத்தைப் பலப்படுத்தத் துணைபுரிபவை. எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள... பைபிள் பதிவில் மார்த்தாள் முதன்முதல் அடியெடுத்து வைக்கிற சம்பவத்திற்குப் போகலாம்.

‘நிறையக் காரியங்களை இழுத்துப்போட்டுக்கொள்கிறாய்’

4. மார்த்தாளோடு யாரெல்லாம் வசித்துவந்தார்கள், அவர்களுக்கும் இயேசுவுக்கும் இடையே எப்படிப்பட்ட பந்தம் இருந்தது?

4 அது பல மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது, லாசரு உயிருடன்... ஆரோக்கியத்துடன்... இருந்தார். பெத்தானியாவிலிருந்த அவருடைய வீட்டுக்கு மிக முக்கியமான விருந்தாளி வரவிருந்தார், ஆம் இயேசு கிறிஸ்து வரவிருந்தார். உடன்பிறப்புகளான லாசரு, மார்த்தாள், மரியாள் மூன்று பேரும் அந்த வீட்டில் வசித்துவந்தார்கள். மார்த்தாள்தான் முன்னால் நின்று விருந்தாளிகளை உபசரித்து வந்ததாகத் தெரிகிறது; அதுமட்டுமல்ல, சில சமயங்களில் அவளுடைய பெயர் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது; அதனால், அவர்களில் மார்த்தாளே மூத்தவளாக இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சிலர் சொல்கிறார்கள். (யோவா. 11:5) அவர்களில் யாருக்காவது திருமணம் ஆகியிருந்ததா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் மூன்று பேரும் இயேசுவுக்கு நெருங்கிய நண்பர்கள் என்பது மட்டும் தெரியும். இயேசு யூதேயாவில் ஊழியம் செய்தபோது அவர்களுடைய வீட்டில்தான் தங்கியிருந்தார்; அந்தப் பகுதியில் அவர் கடும் எதிர்ப்பையும் பகைமையையும் சந்தித்துவந்தார்; ஆகவே, அவர்களுடைய வீட்டில் நிலவிய அமைதியும் அவர்கள் காட்டிய ஆதரவும் அவரை ரொம்பவே நெகிழச் செய்திருக்கும்.

5, 6. (அ) இயேசு வந்திருந்தபோது மார்த்தாள் ஏன் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாள்? (ஆ) இந்தச் சந்தர்ப்பத்தை மரியாள் எப்படிப் பயன்படுத்திக் கொண்டாள்?

5 விருந்தாளிகளுக்கு எல்லாச் சௌகரியங்களையும் செய்துகொடுப்பது... அவர்களை உபசரிப்பது... என மார்த்தாளுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்திருக்கும். பொதுவாக, அவள் சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் இயங்கிக்கொண்டே இருப்பாள். அதுவும் இயேசு வருகிறாரென்றால் சொல்லவா வேண்டும்! இந்த முக்கிய விருந்தாளிக்கும் அவருடன் யாராவது வந்தால் அவர்களுக்கும் தடபுடலாக விருந்தளிக்க உடனடியாகத் திட்டம் போட்டாள். உபசரிக்கும் பண்பு அந்தக் கால கலாச்சாரத்தோடு கலந்த ஒரு முக்கிய பண்பு. ஒரு விருந்தாளி வந்தவுடன் அவரை முத்தம் செய்து வரவேற்று... அவருடைய காலணிகளைக் கழற்றி... பாதங்களைக் கழுவி... புத்துணர்வூட்டும் நறுமணத் தைலத்தைத் தலையில் பூசுவார்கள். (லூக்கா 7:​44-47-ஐ வாசியுங்கள்.) வரவேற்பே இப்படிப் பலமாக இருந்ததென்றால், அவர்கள் தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் எப்பேர்ப்பட்ட கவனிப்பு இருந்திருக்கும்!

6 மார்த்தாளும் மரியாளும் அரக்கப்பரக்க வேலை செய்துகொண்டிருந்தார்கள். அறிவுத்தாகம் நிறைந்தவள் என மரியாள் பொதுவாகச் சித்தரிக்கப்பட்டாலும், முதலில் அவள் தன்னுடைய சகோதரிக்கு வீட்டு வேலைகளில் ஒத்தாசையாக இருந்திருப்பாள். ஆனால் இயேசு வந்தவுடன் நிலைமை மாறியது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அங்கு வந்திருப்பவர்களுக்கு அவர் கற்பிக்கத் தொடங்கினார். அக்கால மதத் தலைவர்களைப் போலில்லாமல், பெண்களை மதித்து அவர்களுக்கு கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி... அதாவது அவருடைய ஊழியத்தின் முக்கியப் பொருளைப் பற்றி... ஆர்வமாய்க் கற்றுக்கொடுத்தார். இப்போது, இயேசுவின் போதனையைக் கேட்கும் பாக்கியம் கிடைத்ததால் மரியாளின் உள்ளத்தில் ஒரே மகிழ்ச்சி! அவரது பாதத்தின் அருகே அமர்ந்து ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கிக் கொண்டாள்.

7, 8. மார்த்தாள் ஏன் ஒரே பதட்டமாக இருந்தாள், கடைசியில் அதை எப்படி வெளிப்படுத்தினாள்?

7 மார்த்தாள் எவ்வளவு பதட்டமாக இருந்திருப்பாள் என்பதை நம் கற்பனையில் காண முடிகிறது அல்லவா? ஒரு பக்கம் விருந்தாளிகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும்... இன்னொரு பக்கம் எல்லாப் பதார்த்தங்களையும் சமைத்து முடிக்க வேண்டும்... ரொம்பவே திண்டாடிப்போனாள்! அவள் இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தபோது மரியாள் மட்டும் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து, கோபத்தில் சிவந்தாளா? இழுத்துப் பெருமூச்சுவிட்டாளா? அல்லது முகம் சுளித்தாளா? அப்படிச் செய்திருந்தாலும் அதில் ஆச்சரியமில்லை. அவள் ஒருத்தியால் எல்லா வேலைகளையும் சமாளிக்க முடியவில்லையே!

8 பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். கடைசியில், இயேசு பேசிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்டு, “என் சகோதரி என்னைத் தனியாக வேலை செய்ய விட்டுவிட்டதை நீங்கள் கவனிக்கவில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டே விட்டாள். (லூக். 10:40) அவை கடுமையான வார்த்தைகள்! “ஆண்டவரே, . . . உமக்குக் கொஞ்சம்கூட அக்கறையில்லையா?” என்று பல பைபிள்கள் அந்தக் கேள்வியை மொழிபெயர்த்திருக்கின்றன. அவள் இயேசுவிடம் இப்படிக் கேட்டுவிட்டு, மறுபடியும் தனக்கு உதவி செய்யும்படி மரியாளுக்குக் கட்டளையிடச் சொன்னாள்.

9, 10. (அ) மார்த்தாளிடம் இயேசு எப்படிப் பதில் அளித்தார்? (ஆ) இவ்வளவு கஷ்டப்பட்டு விருந்து தயார் செய்தது தவறென இயேசு சொல்ல வந்தாரா? விளக்கவும்.

9 இயேசுவின் பதில் மார்த்தாளுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கலாம், அவளுக்கு மட்டுமல்ல, பைபிளை வாசிக்கிற பலருக்கும்தான். இயேசு கனிவாக அவளிடம், “மார்த்தாளே, மார்த்தாளே, நீ நிறையக் காரியங்களை இழுத்துப்போட்டுக்கொண்டு திண்டாடுகிறாய். கொஞ்சம் இருந்தாலே போதும், ஒன்றே ஒன்றுகூடப் போதும். மரியாளைப் பொறுத்தவரை, அவள் மிகச் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்று கூறினார். (லூக். 10:​41, 42) இயேசு அவளிடம் என்ன சொல்ல வந்தார்? ஆன்மீக விஷயங்களில் அவளுக்கு அக்கறையில்லை என்று சொல்ல வந்தாரா? இவ்வளவு கஷ்டப்பட்டு விருந்து தயார் செய்தது தவறெனச் சொல்ல வந்தாரா?

மார்த்தாள் ‘நிறையக் காரியங்களை இழுத்துப்போட்டுக்கொண்டு திண்டாடினாலும்’ இயேசுவின் அறிவுரையைத் தாழ்மையோடு ஏற்றுக்கொண்டாள்

10 இல்லை. நல்லெண்ணத்தோடும் அன்போடும்தான் மார்த்தாள் எல்லாவற்றையும் செய்தாள் என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். அதோடு, தடபுடலான விருந்து கொடுப்பதில் தவறேதும் இருப்பதாக அவர் நினைக்கவில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் மத்தேயு கொடுத்த ‘ஒரு பெரிய விருந்தில்’ அவர் சந்தோஷமாகக் கலந்துகொண்டாரே! (லூக். 5:29) எனவே, மார்த்தாள் விருந்து தயார் செய்தது பிரச்சினையே இல்லை; எதற்கு முதலிடம் கொடுத்தாள் என்பதுதான் பிரச்சினையே. அவளுடைய கவனம் முழுக்க பிரமாதமான விருந்து கொடுப்பதிலேயே இருந்தது; அதனால், முக்கியமான விஷயத்திற்குக் கவனம் செலுத்தத் தவறிவிட்டாள். அது என்ன?

மார்த்தாள் காட்டிய உபசரிப்பை இயேசு ஏற்றுக்கொண்டார், அவள் நல்லெண்ணத்தோடும் அன்போடும்தான் எல்லாவற்றையும் செய்தாள் என்பதை அவர் அறிந்திருந்தார்

11, 12. மார்த்தாளை இயேசு எப்படி மென்மையாகக் கண்டித்தார்?

11 சத்தியத்தைக் கற்றுக்கொடுக்க அவளுடைய வீட்டுக்கு இயேசு வந்திருந்தார்... யெகோவா தேவனின் ஒரே மகன் வந்திருந்தார்! இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், வேறெதுவும் முக்கியமாக இருந்திருக்குமா? ஏன், பிரமாதமான விருந்து தயாரிப்பதுகூட முக்கியமாக இருந்திருக்குமா? அதனால், விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கான பாக்கியத்தை அவள் இழப்பதை நினைத்து இயேசு வருத்தம்தான் அடைந்திருப்பார். இருந்தாலும், அவளுக்கு எது வேண்டுமோ அதை அவளே தேர்ந்தெடுக்கட்டும் என விட்டுவிட்டார். * அப்படியிருக்க, மரியாளும் இயேசுவின் போதனையைக் கேட்கும் பாக்கியத்தை இழக்க வேண்டுமென அவள் வற்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்?

12 அதனால், இயேசு அவளை மென்மையாகக் கண்டித்தார்; அவளுடைய பெயரை இரண்டு முறை பாசத்தோடு சொல்லி அவளைச் சாந்தப்படுத்த முயன்றார்; ‘நிறையக் காரியங்களை இழுத்துப்போட்டுக்கொண்டு திண்டாட’ வேண்டிய அவசியம் இல்லையென்றும் கனிவுடன் சொன்னார். ஓரிரு பதார்த்தங்களுடன் எளிய உணவே போதுமானது, முக்கியமாக ஆன்மீக விருந்தை அனுபவிக்கும் சந்தர்ப்பத்தில். எனவே, “மிகச் சிறந்ததை” மரியாள் தேர்ந்தெடுப்பதை, அதாவது தமது போதனையைக் கேட்பதை, அவர் தடுக்க மாட்டாரே!

13. மார்த்தாளிடம் இயேசு சொன்ன வார்த்தைகளிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்?

13 இந்தச் சிறிய சம்பவம் நமக்குப் பெரிய பாடங்களைக் கற்றுத் தருகிறது! ‘ஆன்மீக விஷயங்களில் நம் ஆர்வப்பசியை’ திருப்தி செய்வதற்கு எதையும் முட்டுக்கட்டையாக வரவிடக் கூடாது. (மத். 5:3) மார்த்தாள் காட்டிய தாராள குணமும் சுறுசுறுப்பும் நமக்குச் சிறந்த முன்மாதிரிதான்; என்றாலும், முக்கியமான காரியங்களைத் தவறவிடும் அளவுக்கு உபசரிப்பதிலேயே மூழ்கிவிடக் கூடாது, ‘நிறையக் காரியங்களை இழுத்துப்போட்டுக்கொண்டு திண்டாடக் கூடாது.’ சக கிறிஸ்தவர்களுடன் நேரம் செலவிடும்போது ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதற்கும் ஆன்மீக விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதற்குமே முக்கியத்துவம் தர வேண்டும், தடபுடலான விருந்து கொடுப்பதற்கோ அனுபவிப்பதற்கோ அல்ல. (ரோமர் 1:​11, 12-ஐ வாசியுங்கள்.) மிக மிக எளிய உணவு பரிமாறப்பட்டாலும் அந்தத் தருணத்தை ஆன்மீக மணங்கமழும் தருணமாக மாற்ற முடியும்.

அன்பு சகோதரன் மறைந்தார்... மலர்ந்தார்...

14. அறிவுரையை ஏற்றுக்கொள்வதில் மார்த்தாள் சிறந்த முன்மாதிரி என்று எப்படிச் சொல்லலாம்?

14 இயேசு கொடுத்த அன்பான அறிவுரையை மார்த்தாள் ஏற்றுக்கொண்டாளா, அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டாளா? அதில் சந்தேகமே இல்லை. ஏனென்றால், லாசருவைப் பற்றிய பரவசமூட்டுகிற ஒரு பதிவை அறிமுகப்படுத்தியபோது, “மார்த்தாளையும் அவளுடைய சகோதரியையும் லாசருவையும் இயேசு நேசித்தார்” என அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (யோவா. 11:5) பெத்தானியாவிலிருந்த அவர்களுடைய வீட்டுக்கு இயேசு வந்துபோய் மாதங்கள் பல ஓடிவிட்டன. இயேசு தன்னைக் கண்டித்ததை மனதில் வைத்துக்கொண்டு மார்த்தாள் முகத்தைத் தூக்கிவைத்துக் கொள்ளவில்லை; அவர்மீது மனக்கசப்பு கொள்ளவும் இல்லை; அவர் கொடுத்த அன்பான அறிவுரையை முழுமனதோடு ஏற்றுக்கொண்டாள். இந்த விஷயத்திலும்... விசுவாசமுள்ள இந்தப் பெண் நமக்குச் சிறந்த முன்மாதிரி! நம் அனைவருக்கும் அவ்வப்போது சின்ன சின்ன அறிவுரைகள் அவசியம்தானே?

15, 16. (அ) தன்னுடைய சகோதரன் நோய்வாய்ப்பட்டபோது மார்த்தாள் எப்படிக் கவனித்துக்கொண்டாள்? (ஆ) மார்த்தாள், மரியாளின் நம்பிக்கை ஏன் சுக்குநூறானது?

15 தன்னுடைய சகோதரன் நோய்வாய்ப்பட்டபோது, மார்த்தாள் அவர் பக்கத்திலேயே இருந்து கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்திருப்பாள். சீக்கிரம் குணமாவதற்காக அவருக்குத் தேவையான எல்லா உதவியையும் செய்திருப்பாள். ஆனால், நாளுக்கு நாள் லாசருவின் உடல்நிலை மோசமாகிக்கொண்டேதான் போனது. அவர் தலைமாட்டிலேயே உட்கார்ந்து சகோதரிகள் இருவரும் அவரை இராப்பகலாய்க் கவனித்திருப்பார்கள். கன்னமெல்லாம் ஒட்டிப்போய்... கண்ணெல்லாம் குழிவிழுந்து... பரிதாபமாய்க் கிடக்கும் தன் சகோதரனின் முகத்தை மார்த்தாள் பார்க்கும்போதெல்லாம், இத்தனை காலமாக அவர்கள் ஒன்றுசேர்ந்து அனுபவித்த சுகதுக்கங்கள் அவளுடைய மனதில் வந்துபோயிருக்கும்.

16 லாசருவின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானபோது, மார்த்தாளும் மரியாளும் இயேசுவுக்குத் தகவல் அனுப்பினார்கள். அப்போது, சுமார் இரண்டு நாள் பயண தூரத்தில் இயேசு ஊழியம் செய்துகொண்டிருந்தார். “எஜமானே, உங்கள் பாசத்திற்குரிய நண்பன் நோய்வாய்ப்பட்டிருக்கிறான்” என்று சொல்லி அனுப்பினார்கள். (யோவா. 11:​1, 3) தமது நேசத்திற்குரிய நண்பனை அவர் எப்படியும் காப்பாற்றிவிடுவார் என்று நம்பினார்கள். நிலைமை கைமீறிப் போவதற்கு முன்னால் இயேசு வந்துவிடுவார் என உறுதியாக நம்பினார்களா? அப்படியானால், அவர்களுடைய நம்பிக்கை சுக்குநூறானது. லாசரு இறந்துபோனார்.

17. மார்த்தாள் ஏன் குழம்பிப்போயிருந்திருக்கலாம், இயேசு பெத்தானியாவுக்கு அருகே வந்துகொண்டிருப்பதைக் கேள்விப்பட்டபோது அவள் என்ன செய்தாள்?

17 அப்போது, மார்த்தாளும் மரியாளும் கதறி அழுதார்கள்; லாசருவை அடக்கம் பண்ணுவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள். அச்சமயத்தில், பெத்தானியாவிலிருந்தும் சுற்றுவட்டாரத்திலிருந்தும் துக்கம் விசாரிக்க ஆட்கள் வந்துகொண்டிருந்தார்கள். ஆனால் இயேசு வரவில்லை, அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. நேரம் கடந்து செல்லச் செல்ல மார்த்தாள் ரொம்பவே குழம்பிப்போயிருந்திருக்கலாம். லாசரு இறந்து நான்கு நாட்கள் கழித்து, பெத்தானியாவுக்கு அருகே இயேசு வந்துகொண்டிருப்பதைப் பற்றிய செய்தி அவளுக்குக் கிடைத்தது. எப்போதும் துடிப்பாகச் செயல்படும் மார்த்தாள் சோகத்தில் மூழ்கியிருந்த இந்தச் சமயத்திலும்... மரியாளிடம்கூட சொல்லாமல்... இயேசுவைப் பார்க்க வேகமாகப் போனாள்.​யோவான் 11:​18-20-ஐ வாசியுங்கள்.

18, 19. மார்த்தாளுக்கு என்ன நம்பிக்கை இருந்தது, அவளுடைய விசுவாசம் ஏன் குறிப்பிடத்தக்கது?

18 இயேசுவைப் பார்த்தவுடன், இத்தனை நாட்களாகத் தன் மனதிலும் மரியாளின் மனதிலும் தேங்கியிருந்த ஏக்கத்தைக் கொட்டுகிறாள். “எஜமானே, நீங்கள் இங்கு இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்று சொல்கிறாள். இருந்தாலும், மார்த்தாளுடைய நம்பிக்கையும் விசுவாசமும் இன்னும் மறைந்துவிடவில்லை. எனவே, அவள் இயேசுவைப் பார்த்து, “நீங்கள் கடவுளிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குத் தருவாரென்று இப்போதும் நம்புகிறேன்” என்று சொல்கிறாள். அவளுடைய விசுவாசத்தை இன்னும் பலப்படுத்துவதற்காக இயேசு உடனடியாக அவளிடம், “உன் சகோதரன் எழுந்திருப்பான்” என்று சொல்கிறார்.​—யோவா. 11:​21-23.

19 எதிர்காலத்தில் நடக்கப்போகிற உயிர்த்தெழுதலைப் பற்றி இயேசு பேசுவதாக மார்த்தாள் நினைக்கிறாள். எனவே, “கடைசி நாளில் உயிர்த்தெழுதல் நடைபெறும்போது அவன் எழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்” எனக் கூறுகிறாள். (யோவா. 11:24) உயிர்த்தெழுதலில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருக்கிறாள். யூத மதத் தலைவர்களான சதுசேயருக்கும் அவளுக்கும் எவ்வளவு வித்தியாசம்! உயிர்த்தெழுதலைப் பற்றி வேதவசனங்கள் தெளிவாகக் கற்பித்திருந்தும்கூட அதை அவர்கள் நம்புவதில்லை. (தானி. 12:13; மாற். 12:18) உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றி இயேசு கற்பித்ததும் அவரே சிலரை உயிர்த்தெழுப்பியதும் மார்த்தாளுக்குத் தெரியும். ஆனால், இறந்துபோன யாரையும் நான்கு நாட்கள் கழித்து அவர் இதுவரை உயிர்த்தெழுப்பவில்லை. ஆகவே, இப்போது இயேசு என்ன செய்யப்போகிறார் என்று அவளுக்குத் தெரியவில்லை.

20. யோவான் 11:​25-27-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளையும் மார்த்தாளின் பதிலையும் விளக்குங்கள்.

20 நெஞ்சைத் தொடும் வார்த்தைகளை இயேசு அவளிடம் சொல்கிறார்; “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன்” என்று கூறுகிறார். சொல்லப்போனால், உயிர்த்தெழுதலை உலகெங்கும் நடப்பிக்கிற அதிகாரத்தை யெகோவா தேவன் அவருக்கு அளித்திருக்கிறார். இயேசு மார்த்தாளைப் பார்த்து, “இதை நம்புகிறாயா?” என்று கேட்கிறார். அதற்கு மார்த்தாள் சொல்லும் பதில் இந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் உள்ளது. இயேசுவே கிறிஸ்து அல்லது மேசியா... அவரே யெகோவா தேவனுடைய மகன்... அவரே தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தபடி இந்த உலகத்திற்கு வரவேண்டியவர்... என்பதை விசுவாசிக்கிறாள்.​—யோவா. 5:​28, 29; யோவான் 11:​25-27-ஐ வாசியுங்கள்.

21, 22. (அ) துக்கப்படுகிறவர்கள் முன்னால் இயேசு எப்படித் தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்? (ஆ) லாசரு உயிர்த்தெழுந்ததை விவரியுங்கள்.

21 மார்த்தாளைப் போல விசுவாசம் காட்டுபவர்களை யெகோவாவும் இயேசுவும் உயர்வாய் மதிக்கிறார்களா? மார்த்தாளின் கண்களுக்கு முன்னால் அடுத்தடுத்து அரங்கேறுகிற காட்சிகள் இந்தக் கேள்விக்குத் தெள்ளத்தெளிவான பதில் அளிக்கின்றன. மார்த்தாள் தன் சகோதரியைக் கூப்பிட ஓட்டமாய் ஓடுகிறாள். அதற்குப்பின், மரியாளிடமும் கண்கலங்கி நிற்கிற மற்றவர்களிடமும் இயேசு பேசும்போது, அவர் மனம் உருகுவதைப் பார்க்கிறாள். அன்பானவரைப் பறிகொடுக்கும் கொடிய வேதனையை அவர் அனுபவிப்பதையும், துக்கத்தை நெஞ்சுக்குள் புதைக்காமல் கண்ணீரில் வெளிப்படுத்துவதையும் கவனிக்கிறாள். லாசருவின் கல்லறையிலிருந்து கல்லை எடுத்துப்போடச் சொல்லி இயேசு கட்டளையிடுவதைக் கேட்கிறாள்.​—யோவா. 11:​28-39.

22 எதையும் யதார்த்தமாக யோசிக்கிற மார்த்தாள் அதை ஆட்சேபிக்கிறாள்; லாசரு இறந்து “நான்கு நாளாகிவிட்டது, நாறுமே” என்று சொல்கிறாள். அதற்கு இயேசு, “நீ நம்பிக்கை வைத்தால் கடவுளுடைய மகிமையைக் காண்பாய் என உனக்குச் சொன்னேன் அல்லவா?” என்று திரும்பவும் சொல்கிறார். ஆம், அவள் நம்புகிறாள், யெகோவா தேவனின் மகிமையைப் பார்க்கிறாள். அங்கேயே... அப்போதே... லாசருவை உயிரோடு எழுப்பும் சக்தியை யெகோவா தம் மகனுக்குத் தருகிறார்! அடுத்து வரும் சம்பவங்கள் மரணம்வரை மார்த்தாளுடைய மனதைவிட்டு மறையாமல் இருந்திருக்கும். அவற்றை உங்கள் மனதில் காட்சிப்படுத்திப் பாருங்கள்: “லாசருவே, வெளியே வா!” என்று இயேசு அதிகார தொனியில் அழைக்கிறார்; உடனே, மெல்லிய சத்தம் கேட்கிறது; உடல் முழுக்கச் சுற்றப்பட்டுள்ள துணியோடு லாசரு எழுகிறார்; அந்தக் குகையின் வாசலை நோக்கி நடந்து வருகிறார். “இவனுடைய கட்டுகளை அவிழ்த்துவிடுங்கள்” என்று இயேசு கட்டளையிடுகிறார்; அந்த வினாடி... மார்த்தாளும் மரியாளும் சந்தோஷத்தின் சிகரத்திற்கே போகிறார்கள்; ஓடிப்போய் தங்கள் சகோதரனை நெஞ்சாரத் தழுவுகிறார்கள். (யோவான் 11:​40-44-ஐ வாசியுங்கள்.) பாராங்கல்போல் மார்த்தாளின் மனதை அழுத்திக்கொண்டிருந்த பாரமெல்லாம் நீங்கிவிடுகிறது!

இயேசுமீது மார்த்தாள் வைத்திருந்த விசுவாசத்திற்குப் பலன் கிடைத்தது, ஆம், அவளும் மரியாளும் தங்களுடைய சகோதரன் உயிர்த்தெழுப்பப்பட்டதைப் பார்த்தார்கள்

23. உங்களுக்கு என்ன செய்ய யெகோவாவும் இயேசுவும் ஆசை ஆசையாய் இருக்கிறார்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

23 மாண்டோர் உயிர்பெறுவர் என்பது ஏதோ கற்பனை அல்ல... அது நம் மனதைக் குளிர்விக்கும் பைபிள் போதனை... சரித்திரப்பூர்வமாய் நிரூபிக்கப்பட்ட உண்மை... என்பதை இந்தப் பதிவு காட்டுகிறது. (யோபு 14:​14, 15) விசுவாசமுள்ளவர்களை ஆசீர்வதிக்க யெகோவாவும் அவரது மகனும் ஆசை ஆசையாய் இருக்கிறார்கள். ஆம், மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் லாசருவுக்கும் பலன் அளித்தது போல் பலன் அளிப்பார்கள்; நீங்கள் உறுதியான விசுவாசத்தை வளர்த்துக்கொண்டால் உங்களுக்கும் ஆசி மழை பொழிவார்கள்.

‘மார்த்தாள் உணவு பரிமாறிக்கொண்டிருக்கிறாள்’

24. பைபிளில் மார்த்தாளைப் பற்றிய கடைசி வாக்கியம் என்ன?

24 மார்த்தாளைப் பற்றி இன்னும் ஒரேவொரு சமயம் மட்டும்தான் பைபிள் குறிப்பிடுகிறது. அது, இயேசு இந்தப் பூமியில் வாழ்ந்த கடைசி வாரத்தின் ஆரம்பம். தாம் படப்போகிற பாடுகளை இயேசு முன்னரே நன்கு அறிந்திருப்பதால், மறுபடியும் பெத்தானியாவில்... அமைதி தவழும் லாசருவின் வீட்டில்... தங்குகிறார். அங்கிருந்து மூன்றே கிலோமீட்டர் நடந்தால் எருசலேமை எட்டிவிடலாம். முன்பு குஷ்டரோகியாக இருந்த சீமோனின் வீட்டில் இயேசுவும் லாசருவும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்; அங்கே ‘மார்த்தாள் உணவு பரிமாறிக்கொண்டிருக்கிறாள்.’ பைபிளில் இதுதான் மார்த்தாளைப் பற்றிய கடைசி வாக்கியம்.​—யோவா. 12:2.

25. இன்று சபைகளில் மார்த்தாளைப் போன்றவர்கள் இருப்பது ஓர் ஆசீர்வாதமென எப்படிச் சொல்லலாம்?

25 கடின உழைப்புக்குப் பேர்போன பெண்ணைப் பற்றிய அந்த வாக்கியம் சாலப் பொருத்தமே! அவளைப் பற்றி பைபிளில் முதன்முதல் வாசிக்கிறபோதும் சரி கடைசியாக வாசிக்கிறபோதும் சரி, அவள் வேலை செய்துகொண்டிருக்கிறாள்; நேசத்திற்குரியவர்களைக் கவனித்துக்கொள்ள தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறாள். இன்றும்கூட கிறிஸ்தவச் சபைகளில் தாராள குணமுள்ள, நெஞ்சுரமிக்க மார்த்தாள்கள் இருப்பது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்! இப்படிப்பட்டவர்கள் தங்களையே அர்ப்பணிப்பதன் மூலம் விசுவாசத்தைச் செயலில் காட்டுகிறார்கள். மார்த்தாள் கடைசிவரை விசுவாசமுள்ளவளாக இருந்தாளா? இருந்திருப்பாள் என்றே நம்பலாம். அந்த விசுவாசம்தான் வரப்போகும் சோதனைகளைச் சகிக்க அவளுக்குக் கைகொடுத்திருக்கும்.

26. மார்த்தாளின் விசுவாசம் என்ன செய்ய அவளுக்கு உதவியது?

26 சில தினங்களில், அவளது அன்புக்குரிய எஜமானரான இயேசு கொடூரமாகக் கொல்லப்படுகிறார்; அதை அவள் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதோடு, இயேசுவைக் கொன்ற அதே நயவஞ்சகர்கள் லாசருவையும் கொல்லத் திட்டம் தீட்டியிருந்தார்கள்; ஏனென்றால் லாசரு உயிர்த்தெழுந்ததைப் பார்த்த அநேகர் இயேசுவின்மீது விசுவாசம் வைத்திருந்தார்கள். (யோவான் 12:​9-11-ஐ வாசியுங்கள்.) காலப்போக்கில், மார்த்தாளுக்கும் அவளுடைய உடன்பிறப்புகளுக்கும் இடையே இருந்த பாசப்பிணைப்பை மரணம் அறுத்திருக்கும். அது எப்போது நடந்தது... எப்படி நடந்தது... நமக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகத் தெரியும்: மார்த்தாள் வெளிக்காட்டிய விலைமதிப்பில்லாத விசுவாசம் கடைசிவரை சகித்திருக்க அவளுக்கு உதவியது. இன்றுள்ள கிறிஸ்தவர்கள் அவளது விசுவாசத்தைப் பின்பற்றுவது எவ்வளவு முக்கியம்!

^ பாரா. 11 முதல் நூற்றாண்டு யூத சமுதாயத்தில், கல்விமான்களிடம் பெண்கள் கற்றுக்கொள்ளும் வழக்கம் பொதுவாகக் கிடையாது. வீட்டு வேலைகளுக்குத்தான் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதனால், ஒரு கல்விமானின் காலடியில் அமர்ந்து ஒரு பெண் கற்றுக்கொள்வது மார்த்தாளுக்கு மிகவும் வினோதமாய்த் தோன்றியிருக்கலாம்.