லூக்கா எழுதியது 7:1-50

7  மக்களுக்குச் சொல்ல வேண்டியதையெல்லாம் அவர் சொல்லி முடித்த பிறகு கப்பர்நகூமுக்குள் போனார்.  படை அதிகாரியான* ஒருவருக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு, சாகிற நிலையில் இருந்தான்.+  இயேசுவைப் பற்றி அந்தப் படை அதிகாரி கேள்விப்பட்டபோது தன்னுடைய வேலைக்காரனைக் காப்பாற்ற வரும்படி கேட்டுக்கொள்வதற்காக யூதர்களுடைய பெரியோர்களில்* சிலரை அவரிடம் அனுப்பினார்.  அவர்கள் இயேசுவிடம் போய் மிகவும் கெஞ்சி, “நீங்கள் இந்த உதவியைச் செய்வதற்கு இவர் தகுதியானவர்.  ஏனென்றால், இவர் நம்முடைய மக்களை நேசிக்கிறார்; இங்கே ஒரு ஜெபக்கூடத்தையும் கட்டித் தந்திருக்கிறார்” என்று சொன்னார்கள்.  அதனால், இயேசு அவர்களோடு போனார். ஆனால், அந்த வீட்டுக்குச் சற்றுத் தூரத்தில் அவர் வந்துகொண்டிருந்தபோதே, படை அதிகாரி தன் நண்பர்களை அனுப்பி, “ஐயா, உங்களுக்குச் சிரமம் வேண்டாம்; நீங்கள் என்னுடைய வீட்டுக்குள் அடியெடுத்து வைப்பதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை.+  உங்களை வந்து பார்ப்பதற்கும்கூட தகுதி இல்லை. அதனால், ஒரு வார்த்தை சொல்லுங்கள், என் வேலைக்காரன் குணமாகட்டும்.  நான் அதிகாரம் உள்ளவர்களின் கீழ் வேலை செய்தாலும், என் அதிகாரத்துக்குக் கீழும் படைவீரர்கள் இருக்கிறார்கள்; நான் அவர்களில் ஒருவனிடம் ‘போ!’ என்றால் போகிறான், இன்னொருவனிடம் ‘வா!’ என்றால் வருகிறான்; என் அடிமையிடம் ‘இதைச் செய்!’ என்றால் செய்கிறான்” என்று சொல்லச் சொன்னார்.  அதைக் கேட்டு இயேசு ஆச்சரியப்பட்டு, தன் பின்னால் வந்துகொண்டிருந்த கூட்டத்தாரிடம் திரும்பி, “நான் உங்களுக்குச் சொல்கிறேன், இஸ்ரவேலில்கூட இப்பேர்ப்பட்ட விசுவாசத்தை நான் பார்த்ததில்லை”+ என்று சொன்னார். 10  அவரிடம் அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, அந்த வேலைக்காரன் குணமாகியிருந்ததைப் பார்த்தார்கள்.+ 11  பின்பு, நாயீன் என்ற நகரத்துக்கு அவர் பயணம் செய்தார். அவருடைய சீஷர்களும் ஏராளமான மக்களும் அவரோடு பயணம் செய்தார்கள். 12  அந்த நகரத்தின் வாசலுக்குப் பக்கத்தில் அவர் வந்தபோது, இறந்துபோன ஒருவனைச் சிலர் தூக்கிக்கொண்டு வந்தார்கள். அவன் தன்னுடைய அம்மாவுக்கு ஒரே மகன்.+ அவளோ ஒரு விதவை. அந்த நகரத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அவளோடு வந்தார்கள். 13  இயேசு அவளைப் பார்த்தபோது, மனம் உருகி,+ “அழாதே”+ என்று சொன்னார். 14  பின்பு, பாடைக்குப் பக்கத்தில் போய் அதைத் தொட்டார். அதைத் தூக்கிக்கொண்டு வந்தவர்கள் அப்படியே நின்றார்கள். அப்போது அவர், “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திரு!”+ என்று சொன்னார். 15  இறந்துபோனவன் எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தான்; பின்பு, இயேசு அவனை அவனுடைய அம்மாவிடம் ஒப்படைத்தார்.+ 16  அங்கிருந்த எல்லாரும் பயந்துபோனார்கள்; “பெரிய தீர்க்கதரிசி ஒருவர் நம் மத்தியில் தோன்றியிருக்கிறார்”+ என்றும், “கடவுள் தன்னுடைய மக்கள்மேல் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்”+ என்றும் சொல்லி கடவுளை மகிமைப்படுத்த ஆரம்பித்தார்கள். 17  அவரைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா முழுவதும் அதன் சுற்றுப்புறம் முழுவதும் பரவியது. 18  யோவானுடைய சீஷர்கள் இவற்றையெல்லாம் யோவானிடம் சொன்னார்கள்.+ 19  அதனால், அவர் தன் சீஷர்களில் இரண்டு பேரைக் கூப்பிட்டு, “வர வேண்டியவர் நீங்கள்தானா+ அல்லது வேறொருவரையும் நாங்கள் எதிர்பார்க்க வேண்டுமா?” என்று கேட்கச் சொல்லி இயேசுவிடம் அனுப்பினார். 20  அந்தச் சீஷர்கள் போய், “யோவான் ஸ்நானகர்* எங்களை உங்களிடம் அனுப்பி, ‘வர வேண்டியவர் நீங்கள்தானா அல்லது வேறொருவரையும் நாங்கள் எதிர்பார்க்க வேண்டுமா?’ என்று கேட்கச் சொன்னார்” என்றார்கள். 21  அந்த நேரத்தில் பலவிதமான நோய்களையும் கொடிய வியாதிகளையும் அவர் நீக்கினார்,+ பேய்களைத் துரத்தினார், ஏராளமான ஆட்களைக் குணமாக்கினார், பார்வையில்லாத நிறைய பேருக்குப் பார்வை கொடுத்தார். 22  அதன் பின்பு அவர் அந்தச் சீஷர்களிடம், “நீங்கள் பார்த்ததையும் கேட்டதையும் யோவானிடம் போய்ச் சொல்லுங்கள்: பார்வை இல்லாதவர்கள் பார்க்கிறார்கள்,+ நடக்க முடியாதவர்கள் நடக்கிறார்கள், தொழுநோயாளிகள் சுத்தமாகிறார்கள், காது கேட்காதவர்கள் கேட்கிறார்கள்,+ இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நல்ல செய்தி சொல்லப்படுகிறது.+ 23  எந்தச் சந்தேகத்துக்கும் இடம் கொடுக்காமல் என்னை நம்புகிறவன் சந்தோஷமானவன்”+ என்று சொன்னார். 24  யோவான் அனுப்பிய ஆட்கள் திரும்பிப் போன பின்பு, இயேசு அந்தக் கூட்டத்தாரிடம் யோவானைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்; அவர்களிடம், “எதைப் பார்க்க வனாந்தரத்துக்குப் போனீர்கள்? காற்றில் அசைந்தாடும் நாணலையா?+ 25  இல்லையென்றால், வேறு எதைப் பார்க்கப் போனீர்கள்? விலை உயர்ந்த உடை உடுத்திய மனுஷனையா?+ விலை உயர்ந்த உடை உடுத்தி ஆடம்பரமாக வாழ்கிறவர்கள் அரண்மனைகளில்தானே இருக்கிறார்கள்! 26  இல்லையென்றால், வேறு யாரைப் பார்க்கப் போனீர்கள்? ஒரு தீர்க்கதரிசியைப் பார்ப்பதற்காகவா? ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு தீர்க்கதரிசியைவிட மேலானவரைப் பார்க்கவே போனீர்கள்.+ 27  ‘இதோ! நான் என்னுடைய தூதுவரை உனக்கு முன்னால் அனுப்புகிறேன். அவர் உனக்கு முன்னால் போய் உன் பாதையைத் தயார்படுத்துவார்’ என்று இவரைப் பற்றித்தான் எழுதப்பட்டிருக்கிறது.+ 28  நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷராகப் பிறந்தவர்களில் யோவானைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை; ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தில் தாழ்ந்தவராக இருக்கிறவர் அவரைவிட உயர்ந்தவராக இருக்கிறார்”+ என்று சொன்னார். 29  யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றிருந்த வரி வசூலிப்பவர்களும் மற்ற எல்லாரும்+ இதைக் கேட்டு, கடவுள் நீதியுள்ளவர் என்று அறிவித்தார்கள். 30  ஆனால், அவரிடம் ஞானஸ்நானம் பெறாத பரிசேயர்களும் திருச்சட்ட வல்லுநர்களும் கடவுளுடைய அறிவுரையை அலட்சியம் செய்தார்கள்.+ 31  அதோடு இயேசு, “இந்தத் தலைமுறையை நான் யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாரைப் போல் இருக்கிறார்கள்?+ 32  சந்தையில் உட்கார்ந்துகொண்டு மற்ற பிள்ளைகளைப் பார்த்து, ‘உங்களுக்காகக் குழல் ஊதினோம், ஆனால் நீங்கள் நடனம் ஆடவில்லை; புலம்பி அழுதோம், ஆனால் நீங்கள் அழவில்லை’ என்று சொல்கிற சின்னப் பிள்ளைகளைப் போல் இருக்கிறார்கள். 33  எப்படியென்றால், யோவான் ஸ்நானகர் ரொட்டி சாப்பிடவும் இல்லை, திராட்சமது குடிக்கவும் இல்லை;+ ஆனால், ‘இவனுக்குப் பேய் பிடித்திருக்கிறது’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். 34  மனிதகுமாரனோ சாப்பிடுகிறார், குடிக்கிறார்; ஆனால், ‘இவன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்!’+ என்று சொல்கிறீர்கள். 35  இருந்தாலும், ஒருவர் செய்கிற நீதியான செயல்கள்* அவர் ஞானமுள்ளவர் என்பதை நிரூபிக்கும்”+ என்று சொன்னார். 36  இயேசுவைத் தன்னுடைய வீட்டுக்கு விருந்து சாப்பிட வரச் சொல்லி பரிசேயர்களில் ஒருவன் கேட்டுக்கொண்டே இருந்தான். அதனால், அவர் அவனுடைய வீட்டுக்குப் போய்ச் சாப்பிட உட்கார்ந்தார். 37  அந்த நகரத்திலிருந்த பாவியாகிய ஒரு பெண் அதைக் கேள்விப்பட்டு, வாசனை எண்ணெய் நிறைந்த வெண்சலவைக்கல் குப்பி ஒன்றை எடுத்துவந்தாள்.+ 38  அவருக்குக் கால்மாட்டில் பின்புறமாக உட்கார்ந்துகொண்டு, அழுதுகொண்டே அவருடைய பாதங்களைக் கண்ணீரால் நனைத்து, தன்னுடைய கூந்தலால் துடைத்தாள். அவருடைய பாதங்களை மென்மையாக முத்தமிட்டு, அந்த வாசனை எண்ணெயை ஊற்றினாள். 39  அவரை விருந்துக்கு அழைத்த பரிசேயன் இதைப் பார்த்து, “இவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால், தன்னைத் தொடுகிற இவள் யார், எப்படிப்பட்டவள் என்றெல்லாம் இவருக்குத் தெரிந்திருக்கும்; இவள் ஒரு பாவியாயிற்றே” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.+ 40  அப்போது இயேசு அவனிடம், “சீமோனே, நான் உனக்கு ஒன்று சொல்கிறேன்” என்றார். அதற்கு அவன், “சொல்லுங்கள், போதகரே!” என்றான். 41  அப்போது அவர், “ஒருவரிடம் இரண்டு பேர் கடன் வாங்கியிருந்தார்கள்; ஒருவன் 500 தினாரியு* வாங்கியிருந்தான், இன்னொருவன் 50 தினாரியு வாங்கியிருந்தான். 42  அவர்களால் கடனைத் திருப்பிக்கொடுக்க முடியாமல் போனபோது, அவர்கள் இரண்டு பேரையுமே அவர் தாராளமாக மன்னித்தார். அப்படியானால், அந்த இரண்டு பேரில் யார் அவரிடம் அதிகமாக அன்பு காட்டுவான்?” என்று கேட்டார். 43  அதற்கு சீமோன், “எவனுக்கு அதிகக் கடனை மன்னித்தாரோ அவன்தான் என்று நினைக்கிறேன்” என்றான். அவர், “சரியாகச் சொன்னாய்” என்றார். 44  பின்பு அந்தப் பெண்ணின் பக்கம் திரும்பி, சீமோனிடம், “இந்தப் பெண்ணைப் பார்த்தாயா? நான் உன்னுடைய வீட்டுக்கு வந்தேன்; நீ என் பாதங்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை. ஆனால் இவள் என் பாதங்களைக் கண்ணீரால் நனைத்து, தன்னுடைய கூந்தலால் துடைத்தாள். 45  நீ என்னை முத்தமிடவில்லை; ஆனால், இந்தப் பெண் நான் உள்ளே வந்ததுமுதல் என்னுடைய பாதங்களை மென்மையாக முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறாள். 46  நீ என் தலையில் எண்ணெய் ஊற்றவில்லை; ஆனால், இந்தப் பெண் என் பாதங்களில் வாசனை எண்ணெயை ஊற்றினாள். 47  நான் உனக்குச் சொல்கிறேன், இவள் நிறைய* பாவங்கள் செய்திருந்தாலும் அவையெல்லாம் மன்னிக்கப்படுகின்றன,+ அதனால் இவள் இன்னும் அதிகமாக அன்பு காட்டுகிறாள்; ஆனால், குறைவாக மன்னிக்கப்படுகிறவன் குறைவாகவே அன்பு காட்டுகிறான்” என்று சொன்னார். 48  பின்பு அவளிடம், “உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன”+ என்று சொன்னார். 49  அவரோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள், “இவர் யார்? பாவங்களைக்கூட மன்னிக்கிறாரே!” என்று சொல்லிக்கொண்டார்கள்.+ 50  ஆனால் அவர் அந்தப் பெண்ணிடம், “உன் விசுவாசம் உனக்கு மீட்பு தந்திருக்கிறது;+ சமாதானமாகப் போ” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “நூறு வீரர்களுக்கு அதிகாரியான.”
வே.வா., “மூப்பர்களில்.”
ஸ்நானகர் என்றால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர்.
வே.வா., “செயல்களால் கிடைக்கிற பலன்கள்.”
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “பெரிய.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

அரண்மனைகள்
அரண்மனைகள்

“அரண்மனைகளில்” (லூ 7:25) அல்லது “ராஜாக்களுடைய அரண்மனைகளில்” (மத் 11:8) வாழ்கிறவர்களைப் பற்றி இயேசு சொன்னபோது, மகா ஏரோது கட்டிய பல சொகுசான மாளிகைகள் மக்களின் ஞாபகத்துக்கு வந்திருக்கலாம். இங்கே போட்டோவில் காட்டப்பட்டிருப்பது, எரிகோவில் மகா ஏரோது கட்டிய குளிர் கால மாளிகையின் ஒரு பகுதியுடைய இடிபாடுகள். இந்தக் கட்டிடத்தில், தூண்கள் நிறைந்த ஒரு வரவேற்பு அறை இருந்தது. அதன் நீளம் 29 மீ. (95 அடி), அகலம் 19 மீ. (62 அடி). அதோடு, தூண்கள் நிறைந்த முற்றங்களும், அவற்றைச் சுற்றிலும் பல அறைகளும் இருந்தன. குளிர்சாதனங்கள் அல்லது வெப்பசாதனங்கள் கொண்ட பெரிய குளியல் அறையும் இருந்தது. படிகளைப் போன்ற அடுக்குகளைக் கொண்ட ஒரு தோட்டம் அந்த மாளிகையோடு இணைந்திருந்தது. யோவான் ஸ்நானகர் தன் ஊழியத்தை ஆரம்பிப்பதற்குச் சில பத்தாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு கலகத்தில், அந்த மாளிகை தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், ஏரோதுவின் மகன் அர்கெலாயு அதை மறுபடியும் கட்டினான்.

சந்தை
சந்தை

இங்கே காட்டப்பட்டிருப்பதைப் போன்ற சில சந்தைகள் சாலையோரமாக அமைந்திருந்தன. வியாபாரிகள் தங்கள் விற்பனைப் பொருள்களைத் தெருவில் குவித்து வைத்ததால் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டது. உள்ளூர்வாசிகளால் வீட்டு உபயோகப் பொருள்களையும், மண்பாண்டங்களையும், விலை உயர்ந்த கண்ணாடிப் பொருள்களையும் அங்கே வாங்க முடிந்தது. காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப்பொருள்களும் அங்கே கிடைத்தன. அந்தக் காலத்தில் குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாததால், தேவையான பொருள்களை வாங்க மக்கள் தினமும் சந்தைக்குப் போக வேண்டியிருந்தது. அங்கே பொதுவாக, மற்ற ஊர் வியாபாரிகள் மூலமோ மற்ற ஊர் மக்கள் மூலமோ கடைக்காரர்கள் சில செய்திகளைத் தெரிந்துகொள்வார்கள்... பிள்ளைகள் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்... வேலை இல்லாதவர்கள் கூலி வேலைக்காகக் காத்துக்கொண்டு இருப்பார்கள். இதுபோன்ற சந்தையில் இயேசு நோயாளிகளைக் குணப்படுத்தியிருக்கிறார், அங்கே பவுலும் ஊழியம் செய்திருக்கிறார். (அப் 17:17) ஆனால், பெருமைபிடித்த வேத அறிஞர்களும் பரிசேயர்களும், இந்தப் பொது இடங்களில் மக்கள் தங்களைக் கவனிக்க வேண்டுமென்றும், தங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்றும் ஆசைப்பட்டார்கள்.

எலும்பினால் செய்யப்பட்ட புல்லாங்குழல்
எலும்பினால் செய்யப்பட்ட புல்லாங்குழல்

பைபிள் காலங்களில், நாணலையோ மூங்கிலையோ வைத்து புல்லாங்குழல் செய்யப்பட்டது; எலும்பையோ தந்தத்தையோ வைத்துக்கூட அது செய்யப்பட்டது. இசைக்கருவிகளிலேயே புல்லாங்குழல்தான் மிகவும் பிரபலமாக இருந்தது. சந்தோஷமான சமயங்களில், உதாரணத்துக்கு விருந்துகளின்போதும் திருமண நிகழ்ச்சிகளின்போதும் புல்லாங்குழல் வாசிக்கப்பட்டது. (1ரா 1:40; ஏசா 5:12; 30:29) அதைப் பார்த்துதான் பிள்ளைகள் பொது இடங்களில் புல்லாங்குழல் ஊதி விளையாடினார்கள். சோகமான சமயங்களிலும் புல்லாங்குழல் வாசிக்கப்பட்டது. பொதுவாக, ஒப்பாரி வைக்கப்பட்டபோது சிலர் புல்லாங்குழலில் சோகமான ராகங்களை வாசித்தார்கள். இங்கே உள்படத்தில் காட்டப்பட்டிருப்பது புல்லாங்குழலின் ஒரு துண்டு; அது எருசலேமில் ஒரு கற்குவியலுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டது. எருசலேம் ஆலயத்தை ரோமர்கள் அழித்த காலப்பகுதியில் அது பயன்படுத்தப்பட்டது. அதன் நீளம் கிட்டத்தட்ட 15 செ.மீ. (6 அங்.) ஒரு பசுவின் முன்னங்கால் எலும்பு ஒன்றிலிருந்து அது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

வெண்சலவைக்கல் குப்பி
வெண்சலவைக்கல் குப்பி

வாசனை எண்ணெயை ஊற்றி வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இந்தச் சிறிய ஜாடிகள், எகிப்திலுள்ள அலபாஸ்ட்ரான் என்ற இடத்துக்குப் பக்கத்தில் கிடைத்த கல்லால் செய்யப்பட்டன. அது ஒரு விதமான சுண்ணாம்புக் கல். பிற்பாடு அது அலபாஸ்ட்ரான் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. படத்தில் காட்டப்பட்டிருக்கும் குப்பி எகிப்தில் கண்டெடுக்கப்பட்டது. அது கி.மு. 150-க்கும் கி.பி. 100-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. அதைவிட விலை குறைந்த ஜிப்சம் போன்ற பொருள்கள், அதே விதமான குப்பிகளைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டன. அவையும் வெண்சலவைக்கல் குப்பிகள் என்றே அழைக்கப்பட்டன. ஏனென்றால், அவையும் அதே காரணத்துக்காகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், விலை உயர்ந்த தைலங்களுக்கும் வாசனை எண்ணெய்களுக்கும் அசல் வெண்சலவைக்கல் குப்பிகள் பயன்படுத்தப்பட்டன. இரண்டு சந்தர்ப்பங்களில், அதாவது கலிலேயாவில் ஒரு பரிசேயரின் வீட்டிலும், பெத்தானியாவில் முன்பு தொழுநோயாளியாக இருந்த சீமோனின் வீட்டிலும், அப்படிப்பட்ட அசல் குப்பிகளிலிருந்த எண்ணெய்தான் இயேசுவின் தலையில் ஊற்றப்பட்டது.