Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளும் கிறிஸ்துவும்​—உண்மைகள்

கடவுளும் கிறிஸ்துவும்​—உண்மைகள்

பல்லாயிரம் தெய்வங்களை மனிதர்கள் வணங்கலாம். ஆனால் இருப்பது ஒரேவொரு உண்மைக் கடவுள்தான். (யோவான் 17:3) அவர் ‘மகா உன்னதமானவர்,’ எல்லாவற்றையும் படைத்தவர், எல்லாவற்றுக்கும் உயிர் கொடுத்தவர். நம் வணக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் தகுதி அவருக்கு மட்டுமே இருக்கிறது.—தானியேல் 7:18; வெளிப்படுத்துதல் 4:11.

கடவுள் யார்?

பைபிள் எழுதப்பட்ட சமயத்தில் கடவுளுடைய பெயர் அதில் 7,000 தடவைக்கும் மேல் இருந்தது

யெகோவா என்பதுதான் கடவுளுடைய பெயர்

எஜமான், கடவுள், தகப்பன்​—யெகோவாவின் பட்டப்பெயர்களில் சில

கடவுளுடைய பெயர். “நான் யெகோவா. அதுதான் என்னுடைய பெயர்” என்று கடவுளே சொல்கிறார். (ஏசாயா 42:8) பைபிள் எழுதப்பட்ட சமயத்தில் கடவுளுடைய பெயர் அதில் 7,000 தடவைக்கும்மேல் இருந்தது. ஆனால், நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகளில் அந்தப் பெயர் இல்லை. அதற்குப் பதிலாக “கர்த்தர்” போன்ற பட்டப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடவுள் உங்களுடைய நண்பராக ஆக விரும்புவதால், அவருடைய ‘பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளும்படி’ உங்களிடம் கேட்கிறார்.—சங்கீதம் 105:1.

யெகோவாவின் பட்டப்பெயர்கள். யெகோவாவை “கடவுள்,” “சர்வவல்லமையுள்ளவர்,” “படைப்பாளர்,” “தகப்பன்,” “எஜமான்,” “ஆண்டவர்,” “உன்னதப் பேரரசர்” என்றெல்லாம் பைபிள் அழைக்கிறது. முன்பு வாழ்ந்த நிறைய பேர் கடவுளுடைய பெயரைச் சொல்லியும் அவருடைய பட்டப்பெயர்களைப் பயன்படுத்தியும் ஜெபம் செய்திருக்கிறார்கள்; அந்த ஜெபங்கள் பைபிளில் பதிவாகியிருக்கின்றன.—தானியேல் 9:4.

கடவுளுடைய உருவம். பார்க்க முடியாத உருவத்தில் கடவுள் இருக்கிறார். (யோவான் 4:24) “கடவுளை ஒருவரும் ஒருபோதும் பார்த்ததில்லை” என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 1:18) அவருக்கு உணர்ச்சிகள் இருப்பதாக அது சொல்கிறது. மனிதர்களால் அவர் மனதைப் புண்படுத்தவும் முடியும் அவருடைய ‘இதயத்தைச் சந்தோஷப்படுத்தவும்’ முடியும்.—நீதிமொழிகள் 27:11; சங்கீதம் 78:40, 41.

கடவுளுடைய அருமையான குணங்கள். எல்லா மக்களிடமும் கடவுள் ஒரேமாதிரி நடந்துகொள்கிறார்; தேசம், பின்னணியை வைத்து பாரபட்சம் காட்டுவதில்லை. (அப்போஸ்தலர் 10:34, 35) அவர் “இரக்கமும் கரிசனையும் உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர், உண்மையுள்ளவர்.” (யாத்திராகமம் 34:6, 7) இதுபோன்ற நிறைய குணங்கள் இருந்தாலும், அவற்றில் நான்கு குணங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

வல்லமை. அவர் “சர்வவல்லமையுள்ள கடவுள்” என்பதால், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்குத் தேவையான எல்லா சக்தியும் அவருக்கு இருக்கிறது.—ஆதியாகமம் 17:1.

ஞானம். கடவுளைப் போல ஞானமுள்ளவர் வேறு யாருமே இல்லை. அதனால்தான், “கடவுள் ஒருவர்தான் ஞானமுள்ளவர்” என்று பைபிள் சொல்கிறது.—ரோமர் 16:27.

நீதி. கடவுள் எப்போதுமே சரியானதைத்தான் செய்கிறார். “அவருடைய செயல்கள் குறை இல்லாதவை,” அவர் “அநியாயமே செய்யாதவர்.”—உபாகமம் 32:4.

அன்பு. “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 4:8) வெறுமனே அன்பைக் காட்டுபவராக அல்ல, அன்பின் உருவாகவே அவர் இருக்கிறார். அவர் செய்யும் எல்லாவற்றிலும் அவருடைய அளவற்ற அன்பு பளிச்சிடுகிறது; அந்த அன்பு நமக்கு நிறைய விதங்களில் நன்மையளிக்கிறது.

கடவுளோடு நண்பராக முடியுமா? கடவுள் நம்முடைய அன்பான பரலோக தகப்பன். (மத்தேயு 6:9) அவர்மேல் விசுவாசம் வைத்தால் நாம் அவருடைய நண்பர்களாக ஆகலாம். (சங்கீதம் 25:14) ஜெபத்தின் மூலம் தன்னிடம் நெருங்கிவரச் சொல்லி கடவுள் சொல்கிறார். அதோடு, ‘உங்கள் கவலைகளையெல்லாம் என்மேல் போட்டுவிடுங்கள்’ என்றும் சொல்கிறார். ஏனென்றால், “அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார்.”—1 பேதுரு 5:7; யாக்கோபு 4:8.

கடவுளுக்கும் இயேசுவுக்கும் என்ன வித்தியாசம்?

இயேசு கடவுள் இல்லை. இயேசு விசேஷமானவர். அவர் ஒருவர்தான் கடவுளால் நேரடியாகப் படைக்கப்பட்டார். அதனால்தான் பைபிள் அவரைக் கடவுளுடைய மகன் என்று அழைக்கிறது. (யோவான் 1:14) யெகோவா அவரைத் தன்னுடைய “கைதேர்ந்த கலைஞனாக” பயன்படுத்தினார்; அவர் மூலமாக மற்ற எல்லாவற்றையும், மற்ற எல்லாரையும் படைத்தார்.—நீதிமொழிகள் 8:30, 31; கொலோசெயர் 1:15, 16.

இயேசு தன்னைக் கடவுள் என்று சொன்னதே இல்லை. அதற்குப் பதிலாக, “நான் [கடவுளுடைய] பிரதிநிதியாக வந்திருக்கிறேன்; அவரே என்னை அனுப்பினார்” என்றுதான் சொன்னார். (யோவான் 7:29) தன்னுடைய சீஷர்களில் ஒருவரோடு பேசியபோது, ‘என் தகப்பனும் உங்கள் தகப்பனும் என் கடவுளும் உங்கள் கடவுளும்’ யெகோவாதான் என்று குறிப்பிட்டார். (யோவான் 20:17) இயேசு இறந்த பிறகு யெகோவா அவரைப் பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பினார்; அதோடு, தன்னுடைய வலது பக்கத்தில் உட்கார வைத்து எல்லா அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்தார்.—மத்தேயு 28:18; அப்போஸ்தலர் 2:32, 33.

கடவுளோடு நண்பராவதற்கு இயேசு கிறிஸ்து உதவி செய்வார்

இயேசு தன் தகப்பனைப் பற்றிச் சொல்லிக்கொடுக்க பூமிக்கு வந்தார். இயேசு சொல்வதைக் கேளுங்கள் என்று யெகோவாவே சொல்லியிருக்கிறார். (மாற்கு 9:7) ஏனென்றால், வேறு யாரையும்விட இயேசுவுக்குத்தான் அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். “மகனுக்கும், மகன் யாருக்கு அவரை வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தவிர வேறு யாருக்கும் தகப்பன் யாரென்று தெரியாது” என்று அவர் சொன்னார்.—லூக்கா 10:22.

இயேசு கடவுளுடைய குணங்களை அப்படியே காட்டுகிறார். இயேசு தன்னுடைய அப்பாவின் குணங்களை அப்படியே காட்டியதால்தான், “என்னைப் பார்த்தவன் என் தகப்பனையும் பார்த்திருக்கிறான்” என்று அவரால் சொல்லமுடிந்தது. (யோவான் 14:9) பேச்சிலும் செயலிலும் தன் அப்பாவைப் போலவே அன்பைக் காட்டியதன் மூலம், மக்கள் கடவுளிடம் நெருங்கி போக இயேசு உதவினார். அவர், “நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாக இருக்கிறேன். என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்” என்று சொன்னார். (யோவான் 14:6) ‘உண்மை வணக்கத்தார் பரலோகத் தகப்பனை அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்குவார்கள் . . . சொல்லப்போனால், தன்னை இப்படி வணங்க விரும்புகிறவர்களையே தகப்பன் தேடிக்கொண்டிருக்கிறார்’ என்றும்கூட அவர் சொன்னார். (யோவான் 4:23) கவனித்தீர்களா?! யெகோவாவைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்பும் உங்களைப் போன்ற ஆட்களைத்தான் அவர் தேடிக்கொண்டிருக்கிறார்!