வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை—மதம், கடவுள், அல்லது பைபிள் எனக்கு உதவ முடியுமா?
பைபிள் தரும் பதில்
ஆம், முடியும். ஞானமுள்ள வார்த்தைகள் அடங்கிய பூர்வகால புத்தகமான பைபிள், வாழ்க்கையின் மிக முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளித்து, உங்களுக்கு மனநிறைவையும் சந்தோஷத்தையும் தர முடியும். அது பதிலளிக்கிற கேள்விகள் சிலவற்றைக் கவனியுங்கள்.
ஒரு படைப்பாளர் இருக்கிறாரா? ‘எல்லாவற்றையும் படைத்தது’ கடவுள்தான் என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 4:11) வாழ்க்கையில் நாம் சந்தோஷத்தையும் மனநிறைவையும் அனுபவிக்க வேண்டும் என்பது நம்முடைய படைப்பாளரான கடவுளுக்குத் தெரியும்.
கடவுளுக்கு என்மேல் அக்கறை இருக்கிறதா? கடவுள் மனிதகுலத்திடமிருந்து ஒதுங்கியிருப்பதாக பைபிள் சொல்வதில்லை, மாறாக ‘அவர் நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லை’ என்றே சொல்கிறது. (அப்போஸ்தலர் 17:27) உங்களைப் பற்றி அவருக்கு அக்கறை இருக்கிறது, வாழ்க்கையில் நீங்கள் ஜெயிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.—ஏசாயா 48:17, 18; 1 பேதுரு 5:7.
கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்வது எனக்கு எப்படிச் சந்தோஷத்தைத் தரும்? “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு” இருக்கிற விதத்தில்தான், அதாவது வாழ்க்கையின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் புரிந்துகொள்வதற்கான ஆர்வம் இருக்கிற விதத்தில்தான், கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார். (மத்தேயு 5:3) நம்முடைய படைப்பாரான அவரைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவரோடு நெருங்கிய பந்தத்தை அனுபவிக்க வேண்டுமென்ற ஆர்வத்துடனும் அவர் நம்மைப் படைத்திருக்கிறார். அவரை நன்றாகத் தெரிந்துகொள்வதற்கு நீங்கள் எடுக்கிற முயற்சிகளைப் பார்த்து அவர் சந்தோஷப்படுவார்; ஏனென்றால், “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று பைபிள் சொல்கிறது.—யாக்கோபு 4:8.
கடவுளோடு நட்புறவை வளர்த்துக்கொண்டால் வாழ்க்கையில் மனநிறைவும் சந்தோஷமும் கிடைக்கும் என்பதை லட்சக்கணக்கான ஆட்கள் அனுபவப்பூர்வமாகக் கண்டிருக்கிறார்கள். கடவுள் உங்கள் வாழ்க்கையை பிரச்சினையில்லா வாழ்க்கையாக மாற்றிவிட மாட்டார் என்றாலும், பைபிளில் பொதிந்துள்ள அவருடைய ஞானமான வார்த்தைகள் கீழ்க்கண்ட விதங்களில் உங்களுக்கு உதவும்:
சந்தோஷமான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்க.
மற்றவர்களோடு சமாதானமாக இருக்க.
மனச்சோர்வு, பணப் பிரச்சினையால் ஏற்படுகிற மன அழுத்தம், நாள்பட்ட வியாதி போன்றவற்றைச் சமாளிக்க.
பைபிளைப் பயன்படுத்துகிற நிறைய மதப்பிரிவுகள் உண்மையில் அதன் போதனைகளைக் கடைப்பிடிப்பதில்லை. ஆனால், பைபிளில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை அப்படியே கடைப்பிடிக்கிற உண்மையான மதம், கடவுளை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.