Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுகிட்ட ஜெபம் செய்றது சரியா?

இயேசுகிட்ட ஜெபம் செய்றது சரியா?

“இ யேசு நம்ம ஜெபத்தை கேட்கிறாரா?”னு ஒரு ஆராய்ச்சியாளர் 800 கிறிஸ்தவ இளைஞர்கள்கிட்ட கேட்டார். அதுல 60 சதவீத இளைஞர்கள், இயேசு கண்டிப்பா நம்ம ஜெபத்தை கேட்கிறார்னு சொன்னாங்க. ஆனா ஒரே ஒரு பெண் மட்டும், இயேசு நம்முடைய ஜெபங்களை கேட்கல, “கடவுள்தான்” கேட்கிறார்னு சொன்னாங்க.

யார்கிட்ட ஜெபம் செய்யணும்னு நீங்க நினைக்கிறீங்க? கடவுள்கிட்டயா, இயேசுகிட்டயா?  *(அடிக்குறிப்பை பாருங்க.) இதுக்கு பதில் தெரிஞ்சுக்க, ஜெபம் செய்றதை பத்தி இயேசு என்ன சொல்லிக்கொடுத்தார்னு பார்க்கலாம்.

யார்கிட்ட ஜெபம் செய்யணும்னு இயேசு சொன்னார்?

யார்கிட்ட ஜெபம் செய்யணும்னு இயேசு சொல்லியும் கொடுத்தார், செஞ்சும் காட்டினார்.

இயேசு மாதிரியே நாமளும் கடவுள்கிட்டதான் ஜெபம் செய்யணும்

இயேசு சொல்லிக்கொடுத்தது: ‘எஜமானே, ஜெபம் செய்ய எங்களுக்குக் கற்றுக்கொடுங்கள்’னு ஒரு சீடர் இயேசுகிட்ட கேட்டார். அதுக்கு அவர், “நீங்கள் ஜெபம் செய்யும்போது, ‘தகப்பனே’”னு சொல்லி ஜெபம் செய்யுங்கனு சொன்னார். (லூக்கா 11:1, 2) “தகப்பனிடம் ஜெபம் செய்யுங்க”னு மலை பிரசங்கத்துலயும் இயேசு சொன்னார். “நீங்கள் கேட்பதற்கு முன்னரே உங்களுக்கு என்னென்ன தேவை என்பதை உங்கள் தகப்பனாகிய கடவுள் அறிந்திருக்கிறார்”னும் சொன்னார். (மத்தேயு 6:6, 8) சாகுறதுக்கு முந்தின இரவு, இயேசு அவருடைய சீடர்கள்கிட்ட பேசிட்டு இருக்கும்போது, “நீங்கள் என் தகப்பனிடம் எதைக் கேட்டாலும், அதை அவர் என்னுடைய பெயரில் உங்களுக்குத் தருவார்”னு சொன்னார். (யோவான் 16:23) இயேசுவுக்கும் நமக்கும் அப்பாவா இருக்கிற யெகோவா தேவன்கிட்டதான் ஜெபம் செய்யணும்னு இதுல இருந்து தெரியுது.—யோவான் 20:17.

இயேசு செஞ்சு காட்டுனது: எப்படி ஜெபம் செய்யணும்னு இயேசு சொல்லிக் கொடுத்தாரோ அதே மாதிரிதான் அவரும் ஜெபம் செஞ்சார். “தகப்பனே, பரலோகத்திற்கும் பூமிக்கும் எஜமானரே, அனைவர் முன்பாகவும் நான் உங்களைப் புகழ்கிறேன்”னு அவர் ஜெபத்தில சொன்னார். (லூக்கா 10:21) இன்னொரு சமயம், “இயேசு வானத்தை நோக்கி, ‘தகப்பனே, என் ஜெபத்தைக் கேட்டதற்காக உங்களுக்கு நன்றி சொல்கிறேன்’”னு சொன்னார். (யோவான் 11:41) சாகுறதுக்கு முன்னாடி கூட, “தகப்பனே, உங்களுடைய கைகளில் என் உயிரை ஒப்படைக்கிறேன்”னு சொன்னார். (லூக்கா 23:46) இதுல இருந்து என்ன தெரியுது? ‘பரலோகத்திற்கும் பூமிக்கும் எஜமானராக’ இருக்கிற யெகோவா அப்பாகிட்டதான் இயேசு ஜெபம் செஞ்சார். அதனால நாமளும் அப்படித்தான் ஜெபம் செய்யணும். (மத்தேயு 11:25; 26:41, 42; 1 யோவான் 2:6) இயேசுவுடைய சீடர்களும் இதே மாதிரிதான் ஜெபம் செஞ்சாங்களா?

சீடர்கள் யார்கிட்ட ஜெபம் செஞ்சாங்க?

இயேசு பரலோகத்துக்கு போன கொஞ்ச நாள்லயே அவருடைய சீடர்களை சிலர் கொடுமை படுத்துனாங்க. (அப்போஸ்தலர் 4:18) உடனே, அவரோட சீடர்கள் உதவி கேட்டு ஜெபம் செஞ்சாங்க. யார்கிட்ட ஜெபம் செஞ்சாங்க? “கடவுளை நோக்கி” ஜெபம் செஞ்சாங்க. அந்த ஜெபத்தை “இயேசுவின் பெயரில்” செஞ்சாங்க. (அப்போஸ்தலர் 4:24, 30) எப்படி ஜெபம் செய்யணும்னு இயேசு சொல்லிக் கொடுத்தாரோ அதே மாதிரி சீடர்கள் ஜெபம் செஞ்சாங்க. இயேசுகிட்ட இல்லை, கடவுள்கிட்டதான் ஜெபம் செஞ்சாங்க.

கொஞ்சம் வருஷத்துக்கு அப்புறம் இயேசுவின் சீடரான பவுலும் அவருடைய நண்பர்களும் எப்படி ஜெபம் செஞ்சாங்கனு பவுலே சொல்றார். “உங்களுக்காக நாங்கள் ஜெபம் செய்யும்போதெல்லாம் நம் எஜமானரான இயேசு கிறிஸ்துவின் தகப்பனாகிய கடவுளுக்கு நன்றி சொல்கிறோம்”னு சொன்னார். (கொலோசெயர் 1:3) “நம் கடவுளும் தகப்பனுமானவருக்கு நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் எல்லாவற்றுக்காகவும் எப்போதும் நன்றி சொல்லுங்கள்”னு இன்னொரு சமயம் அவருடைய நண்பர்களுக்கு பவுல் சொன்னார். (எபேசியர் 5:20) இதுல இருந்து என்ன தெரியுது? “எல்லாவற்றுக்காகவும்” நாம கடவுள்கிட்டதான் ஜெபம் செய்யணும்; ஆனா இயேசுவின் பெயர்ல ஜெபம் செய்யணும்னு தெரியுது.—கொலோசெயர் 3:17.

இயேசு சொன்ன மாதிரியே, யெகோவாகிட்டதான் சீடர்கள் ஜெபம் செஞ்சாங்க. இயேசு மேல அன்பு இருந்தா நாமளும் யெகோவாகிட்டதான் ஜெபம் செய்வோம். (யோவான் 14:15) யெகோவாகிட்ட மட்டும் ஜெபம் செய்யும்போது, அவர் நம்மோட ஜெபத்தை கேட்பார். “கர்த்தர் என் சத்தத்தை . . . கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன். . . . நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்”னு நாமளும் சொல்வோம். *(அடிக்குறிப்பை பாருங்க.)—சங்கீதம் 116:1, 2. ▪ (w15-E 01/01)

^ பாரா. 3 இயேசுவும் கடவுளும் ஒண்ணுதான்னு பைபிள் சொல்றதில்லை. இதை தெரிஞ்சுக்கிறதுக்கு பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில 4-வது அதிகாரத்தை பாருங்க. இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம்,

^ பாரா. 11 யெகோவா நம்ம ஜெபத்தை கேட்கணும்னா, நாம அவருக்கு பிடிச்ச மாதிரி வாழணும். இதை பத்தி தெரிஞ்சுக்க பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில 17-வது அதிகாரத்தை பாருங்க.