Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பழங்கால சுருள் “விரிக்கப்பட்டது”!

பழங்கால சுருள் “விரிக்கப்பட்டது”!

1970-ல் என்-கேதியில் கண்டுபிடிக்கப்பட்ட கருகிய சுருளின் துண்டு, வாசிக்க முடியாத நிலையில் இருந்தது. அதை 3-D ஸ்கேன் செய்தபோது, லேவியராகமப் புத்தகத்தின் ஒரு பகுதியும், அதில் கடவுளுடைய பெயரும் இருந்தது தெரியவந்தது

1970-ல், இஸ்ரேலில், சவக்கடலின் மேற்குக் கரையோரத்தின் பக்கத்தில் இருக்கிற என்-கேதி என்ற இடத்தில், கருகிய நிலையில் இருந்த ஒரு சுருளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். ஜெபக்கூடம் ஒன்றைத் தோண்டியெடுத்தபோது அது அவர்களுடைய கண்ணில்பட்டது. கிட்டத்தட்ட கி.பி. ஆறாவது நூற்றாண்டில் இந்த ஜெபக்கூடம் இருந்த கிராமம் அழிக்கப்பட்டபோது அந்தச் சுருளும் சுட்டெரிக்கப்பட்டது. அது மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், அதில் எழுதப்பட்டிருந்ததை வாசிக்க முடியவில்லை. அந்தச் சுருளைச் சேதப்படுத்தாமல் விரிப்பதும் கஷ்டமாக இருந்தது. ஆனால், 3-D ஸ்கேனர் மூலம், அந்தச் சுருள் “விரிக்கப்பட்டது,” அதாவது, அதில் என்ன இருந்தது என்று பார்க்க முடிந்தது. புகைப்படங்கள் மற்றும் படங்களோடு சம்பந்தப்பட்ட மென்பொருளின் (new digital imaging software) உதவியோடு, அதில் எழுதப்பட்டிருப்பதை வாசிக்க முடிந்தது.

அந்தச் சுருளை ஸ்கேன் செய்தபோது, அதில் வேதாகம எழுத்துகள் இருப்பது தெரியவந்தது. எஞ்சியிருந்த அந்தச் சுருளில், லேவியராகமப் புத்தகத்தின் ஆரம்பத்திலுள்ள சில வசனங்கள் இருக்கின்றன. அந்த வசனங்களில், நான்கு எபிரெய மெய்யெழுத்துகளைக் கொண்ட கடவுளுடைய பெயரும் இருக்கிறது. கி.பி. 50-லிருந்து கி.பி. 400-க்குள் இந்தச் சுருள் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சவக் கடல் கையெழுத்துப் பிரதிகளுக்கு (கும்ரான்) அடுத்ததாக மிகவும் பழமையான எபிரெய பைபிள் சுருள் என்றால், அது இதுதான்! கில் ஸோஹர் என்பவர், தி ஜெருசலேம் போஸ்ட்டில் இப்படி எழுதினார்: “என்-கேதியில் கண்டெடுக்கப்பட்ட லேவியராகமப் புத்தகத்தின் துண்டுகளில் இருந்தவற்றைப் படிக்கும்வரை, . . . இரண்டாம் ஆலய காலப் பகுதியின் கடைசியில் எழுதப்பட்டதும் 2,000 வருஷங்கள் பழமையானதுமான சவக் கடல் சுருளுக்கும், இடைக்காலத்தைச் சேர்ந்ததும் 10-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதுமான அலெப்போ கோடெக்சுக்கும் இடையில் 1,000 வருஷங்கள் இடைவெளி இருந்தது.” தோராவின் எழுத்துகள் “ஆயிரம் வருஷங்களுக்கும்மேல் பாதுகாக்கப்பட்டிருப்பதையும், நகல் எடுத்தவர்களின் தவறுகளால் அந்த எழுத்துகள் மாறாமல் இருப்பதையும்” என்-கேதியில் கண்டெடுக்கப்பட்ட சுருளின் எழுத்துகள் காட்டுவதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள்.