தனிமையை விரட்ட உதவிக்கரம் நீட்டுங்கள்—பைபிள் என்ன சொல்கிறது
உலகத்தில் எங்கே வாழ்ந்தாலும் சரி, தனிமை உணர்வு பலரை வாட்டுகிறது, ஏதோ ஒரு தனி உலகத்தில் வாழ்வதுபோல் அவர்கள் உணர்கிறார்கள். இப்படிப்பட்ட உணர்ச்சியை விரட்டுவதற்கு ஒரு வழி, மற்றவர்களுக்கு உதவி செய்வதுதான் என்று சில மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.
“கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்வது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுக்கிறது, தனிமை உணர்வை விரட்டுவதற்கும் உதவுகிறது.”—ஐ.மா. தேசிய சுகாதார நிறுவனங்கள்.
மற்றவர்களுக்கு நாம் எப்படியெல்லாம் உதவி செய்யலாம் என்பதைப் பற்றி பைபிள் நல்ல நல்ல ஆலோசனைகள் கொடுக்கிறது. அதன்படி நடந்தால் தனிமை உணர்வை நம்மால் விரட்டியடிக்க முடியும்.
நீங்கள் என்ன செய்யலாம்
தாராளமாக கொடுங்கள். மற்றவர்களோடு நேரம் செலவிட, முடிந்தால் அவர்களை நேரில் போய்ப் பார்க்க முயற்சி எடுங்கள். உங்களிடம் இருப்பதை மற்றவர்களுக்கு தாராளமாக கொடுங்கள். நீங்கள் இப்படிச் செய்தால், அவர்கள் உங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள், நீங்கள் இரண்டு பேரும் நல்ல நண்பர்களாக ஆகிவிடுவீர்கள்.
பைபிள் ஆலோசனை: “கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள்.”—லூக்கா 6:38.
மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். பிரச்சினைகளோடு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்யலாம் என்று யோசித்துப் பாருங்கள். அவர்களுடைய வேதனையைப் புரிந்துகொண்டு அவர்கள் பேசும்போது கவனித்துக் கேளுங்கள். அவர்களுடைய கஷ்டத்தைக் குறைப்பதற்கு செய்ய முடிந்த உதவிகளையெல்லாம் செய்யுங்கள்.
பைபிள் ஆலோசனை: “உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான்.”—நீதிமொழிகள் 17:17.
மற்றவர்களோடு நல்ல பந்தத்தை எப்படி வைத்துக்கொள்வது என்பதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள “உறவும் நட்பும் இனிக்க . . . ” என்ற கட்டுரையை வாசியுங்கள்.