மாற்கு எழுதியது 6:1-56
அடிக்குறிப்புகள்
ஆராய்ச்சிக் குறிப்புகள்
மீடியா
பழங்காலத்தில் எபிரெயர்கள் தடிகளை அல்லது கம்புகளைப் பயன்படுத்துவது சகஜமாக இருந்தது. பல காரணங்களுக்காக அவர்கள் தடிகளைப் பயன்படுத்தினார்கள்; உதாரணமாக, பிடிமானத்துக்கு (யாத் 12:11; சக 8:4; எபி 11:21), தற்காப்புக்கு அல்லது பாதுகாப்புக்கு (2சா 23:21), போரடிப்பதற்கு (ஏசா 28:27) மற்றும் ஒலிவப்பழங்களை உதிர்ப்பதற்கு (உபா 24:20) அவற்றைப் பயன்படுத்தினார்கள். உணவுப் பை பொதுவாகத் தோலால் செய்யப்பட்டிருந்தது. பயணிகளும் மேய்ப்பர்களும் விவசாயிகளும் மற்றவர்களும் அதைத் தங்கள் தோளில் சுமந்துகொண்டு போனார்கள். உணவு, துணிமணி போன்றவற்றை எடுத்துக்கொண்டு போவதற்காக அந்தப் பைகள் பயன்படுத்தப்பட்டன. ஊழியம் செய்வதற்காக இயேசு தன் அப்போஸ்தலர்களை அனுப்பியபோது, பல அறிவுரைகளைக் கொடுத்தார். அப்போது, தடிகளையும் உணவுப் பைகளையும் பற்றிக் குறிப்பிட்டார். யெகோவா அவர்களுக்குத் தேவையானதைத் தருவார் என்பதால், தங்களிடம் இருப்பதை மட்டும் கொண்டு போக வேண்டும் என்றும், எதையும் கூடுதலாக வாங்கிக்கொண்டு போகக் கூடாது என்றும் அவர் சொன்னார்.—இயேசு கொடுத்த அறிவுரைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள லூ 9:3 மற்றும் 10:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
பைபிளில், வித்தியாசப்பட்ட பல கூடைகளைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, கிட்டத்தட்ட 5,000 ஆண்களுக்கு இயேசு அற்புதமாக உணவு தந்ததைப் பற்றிய பதிவில், மீதியான ரொட்டிகள் சேகரிக்கப்பட்ட 12 கூடைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை சின்ன பிரம்புக் கூடைகளைக் குறிக்கலாம். ஆனால், கிட்டத்தட்ட 4,000 ஆண்களுக்கு இயேசு உணவு தந்ததைப் பற்றிய பதிவில், மீதியான ரொட்டிகள் சேகரிக்கப்பட்ட ஏழு கூடைகளுக்கு வேறொரு கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. (மாற் 8:8, 9) அது பெரிய கூடைகளைக் குறிக்கிறது. அப் 9:25-லும் இதே கிரேக்க வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வசனத்தில், பவுல் ஒரு “கூடையில்” உட்கார வைக்கப்பட்டு, தமஸ்கு நகர மதிலிலிருந்து ஜன்னல் வழியாகக் கீழே இறக்கிவிடப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.
இங்கே காட்டப்பட்டிருப்பதைப் போன்ற சில சந்தைகள் சாலையோரமாக அமைந்திருந்தன. வியாபாரிகள் தங்கள் விற்பனைப் பொருள்களைத் தெருவில் குவித்து வைத்ததால் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டது. உள்ளூர்வாசிகளால் வீட்டு உபயோகப் பொருள்களையும், மண்பாண்டங்களையும், விலை உயர்ந்த கண்ணாடிப் பொருள்களையும் அங்கே வாங்க முடிந்தது. காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப்பொருள்களும் அங்கே கிடைத்தன. அந்தக் காலத்தில் குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாததால், தேவையான பொருள்களை வாங்க மக்கள் தினமும் சந்தைக்குப் போக வேண்டியிருந்தது. அங்கே பொதுவாக, மற்ற ஊர் வியாபாரிகள் மூலமோ மற்ற ஊர் மக்கள் மூலமோ கடைக்காரர்கள் சில செய்திகளைத் தெரிந்துகொள்வார்கள்... பிள்ளைகள் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்... வேலை இல்லாதவர்கள் கூலி வேலைக்காகக் காத்துக்கொண்டு இருப்பார்கள். இதுபோன்ற சந்தையில் இயேசு நோயாளிகளைக் குணப்படுத்தியிருக்கிறார், அங்கே பவுலும் ஊழியம் செய்திருக்கிறார். (அப் 17:17) ஆனால், பெருமைபிடித்த வேத அறிஞர்களும் பரிசேயர்களும், இந்தப் பொது இடங்களில் மக்கள் தங்களைக் கவனிக்க வேண்டுமென்றும், தங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்றும் ஆசைப்பட்டார்கள்.