ஆதியாகமம் 2:1-25

2  இப்படி, வானமும் பூமியும் அவற்றிலுள்ள எல்லாமும் படைத்து முடிக்கப்பட்டன.+  ஏழாம் நாள் ஆரம்பிப்பதற்குள், இந்த எல்லா வேலைகளையும் கடவுள் முடித்திருந்தார். இதையெல்லாம் முடித்துவிட்டு ஏழாம் நாளில் ஓய்வெடுக்கத் தொடங்கினார்.+  அவர் படைக்க நினைத்த எல்லாவற்றையும் படைத்து முடித்துவிட்டு அந்த நாளில் ஓய்வெடுக்க ஆரம்பித்தார். அந்த ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் புனித நாளாக அறிவித்தார்.*  வானமும் பூமியும் படைக்கப்பட்ட காலத்தில், பூமியையும் வானத்தையும் கடவுளாகிய யெகோவா* படைத்த+ நாளில் நடந்தவற்றைப் பற்றிய பதிவு இதுதான்.  செடிகொடிகளோ மற்ற தாவரங்களோ அதுவரை பூமியில் முளைக்கவில்லை. ஏனென்றால், கடவுளாகிய யெகோவா பூமியில் அதுவரை மழை பெய்யும்படி செய்யவில்லை. அதோடு, நிலத்தைப் பண்படுத்த மனிதனும் இருக்கவில்லை.  ஆனால் பூமியிலிருந்து தண்ணீர் ஆவியாகி மேலே போய், பின்பு முழு நிலத்தையும் நனைத்தது.  அதன்பின், கடவுளாகிய யெகோவா நிலத்திலிருந்து மண்ணை எடுத்து, மனிதனை உருவாக்கத் தொடங்கினார்;+ அவனுடைய மூக்கில் உயிர்மூச்சை ஊதினார்.+ அப்போது அவன் உயிருள்ளவன்* ஆனான்.+  கடவுளாகிய யெகோவா கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம்+ அமைத்து, தான் உருவாக்கிய மனிதனை அங்கே குடிவைத்தார்.+  கடவுளாகிய யெகோவா ருசியான பழங்களைத் தரும் அழகான மரங்களை நிலத்தில் வளர வைத்தார். அதோடு, வாழ்வுக்கான மரத்தையும்+ நன்மை தீமை அறிவதற்கான மரத்தையும்+ தோட்டத்தின் நடுவில் வளர வைத்தார். 10  ஏதேனிலிருந்து ஓடிய ஓர் ஆற்றின் தண்ணீர் அந்தத் தோட்டத்தில் பாய்ந்தது, பின்பு அது நான்கு ஆறுகளாகப் பிரிந்தது. 11  முதலாம் ஆற்றின் பெயர் பைசோன். அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடுகிறது. அந்தத் தேசத்தில் தங்கம் கிடைக்கிறது. 12  அது சுத்தமான தங்கம். வெள்ளைப் பிசினும்* கோமேதகமும்கூட அங்கே கிடைக்கின்றன. 13  இரண்டாம் ஆற்றின் பெயர் கீகோன். அது கூஷ் தேசம் முழுவதையும் சுற்றி ஓடுகிறது. 14  மூன்றாம் ஆற்றின் பெயர் இதெக்கேல்.*+ அது அசீரியாவுக்குக்+ கிழக்கே ஓடுகிறது. நான்காம் ஆற்றின் பெயர் யூப்ரடிஸ்.*+ 15  கடவுளாகிய யெகோவா மனிதனை ஏதேன் தோட்டத்தில் குடிவைத்து, அதைப் பண்படுத்தவும் பராமரிக்கவும் சொன்னார்.+ 16  அதோடு, கடவுளாகிய யெகோவா மனிதனுக்கு இந்தக் கட்டளையைக் கொடுத்தார்: “இந்தத் தோட்டத்தில் இருக்கிற எல்லா மரங்களின் பழங்களையும் நீ திருப்தியாகச் சாப்பிடலாம்.+ 17  ஆனால், நன்மை தீமை அறிவதற்கான மரத்தின் பழத்தை நீ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால், அதே நாளில் கண்டிப்பாகச் செத்துப்போவாய்.”+ 18  பின்பு கடவுளாகிய யெகோவா, “மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல, அவனுக்கு உதவியாக இருப்பதற்குப் பொருத்தமான ஒரு துணையை நான் உண்டாக்குவேன்”+ என்று சொன்னார். 19  அதன்பின், கடவுளாகிய யெகோவா மண்ணிலிருந்து தான் உருவாக்கிய எல்லா காட்டு மிருகங்களுக்கும் பறக்கும் உயிரினங்களுக்கும் மனிதன் என்ன பெயர் வைப்பான் என்று பார்ப்பதற்காக, அவற்றை அவனிடம் கொண்டுவரத் தொடங்கினார். ஒவ்வொரு உயிரினத்துக்கும் மனிதன் என்ன பெயர் வைத்தானோ அதுவே அதன் பெயராக ஆனது.+ 20  இப்படி வீட்டு விலங்குகள், பறக்கும் உயிரினங்கள், காட்டு மிருகங்கள் ஆகிய எல்லாவற்றுக்கும் மனிதன் பெயர் வைத்தான். ஆனால், மனிதனுக்குப் பொருத்தமான ஒரு துணை இருக்கவில்லை. 21  அதனால், கடவுளாகிய யெகோவா அவனுக்கு ஆழ்ந்த தூக்கத்தை வர வைத்தார். அவன் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில், அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்துவிட்டு, அந்த இடத்தை மூடினார். 22  மனிதனிலிருந்து எடுத்த அந்த விலா எலும்பை வைத்து யெகோவா ஒரு பெண்ணை உருவாக்கி, அவளை மனிதனிடம் கொண்டுவந்தார்.+ 23  அப்போது அந்த மனிதன், “இதோ! இவள் என்னுடைய எலும்பின் எலும்பு!என் சதையின் சதை! இவள் மனுஷி என்று அழைக்கப்படுவாள்.ஏனென்றால், இவள் மனுஷனிலிருந்து எடுக்கப்பட்டாள்”+ என்று சொன்னான். 24  அதனால், மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்.* அவர்கள் ஒரே உடலாக* இருப்பார்கள்.+ 25  அந்த முதல் மனிதனும் அவன் மனைவியும் நிர்வாணமாக இருந்தார்கள்,+ ஆனாலும் அவர்கள் வெட்கப்படவில்லை.

அடிக்குறிப்புகள்

அதாவது, “அந்த நாளைத் தனது விசேஷ நோக்கத்திற்காக ஒதுக்கி வைத்தார்.”
இங்குதான் கடவுளுடைய பெயர் முதன்முதலில் குறிப்பிடப்படுகிறது. இணைப்பு A4-ஐப் பாருங்கள்.
சொல் பட்டியலில் “நெஃபெஷ், சைக்கீ” என்ற தலைப்பைப் பாருங்கள்.
சில மரங்களிலிருந்து கிடைக்கும் ஒருவித வாசனைப் பிசின்.
அதாவது, “ஐப்பிராத்து.”
வே.வா., “டைகிரீஸ்.”
இதற்கான எபிரெய வார்த்தை, பசைபோல் இறுக ஒட்டிக்கொண்டிருப்பதை அர்த்தப்படுத்துகிறது.
நே.மொ., “சதையாக.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா