கடவுள் ஏன் சில ஜெபங்களைக் கேட்பதில்லை?
பைபிள் தரும் பதில்
கடவுள் சில ஜெபங்களுக்குப் பதில் தருவதில்லை. அவர் ஒரு நபருடைய ஜெபத்தைக் கேட்காமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று கவனியுங்கள்:
1. அந்த ஜெபம் கடவுளுடைய சித்தத்திற்கு எதிராக இருப்பது
ஒரு ஜெபம் தன்னுடைய சித்தத்திற்கு எதிராக, அல்லது பைபிளிலுள்ள தன்னுடைய சட்டதிட்டங்களுக்கு எதிராக, இருந்தால், கடவுள் அந்த ஜெபத்தைக் கேட்க மாட்டார். (1 யோவான் 5:14) உதாரணத்திற்கு, நாம் பேராசை பிடித்தவர்களாக இருக்கக் கூடாதென்று பைபிள் சொல்கிறது. சூதாட்டம் பேராசையைத் தூண்டிவிடுகிறது. (1 கொரிந்தியர் 6:9, 10) அதனால், லாட்டரியில் ஜெயிக்க வேண்டுமென நீங்கள் ஜெபம் செய்தால், அந்த ஜெபத்தைக் கடவுள் கேட்க மாட்டார். நீங்கள் கூப்பிடும்போதெல்லாம் ஓடிவந்து உதவ கடவுள் ஒன்றும் ஜீபூம்பா பூதம் போன்றவர் அல்ல. சொல்லப்போனால், அவர் அப்படி இல்லாததற்காக நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்; ஒருவேளை அவர் அப்படி இருந்திருந்தால், மற்றவர்கள் அவரிடம் என்னவெல்லாம் செய்யச் சொல்லிக் கேட்பார்களோ என்று நீங்கள் பயந்து பயந்துதான் இருந்திருக்க வேண்டும்.—யாக்கோபு 4:3.
2. ஜெபம் செய்கிறவர் கீழ்ப்படியாதவராக இருப்பது
தன்னுடைய கோபத்தைத் தூண்டும் காரியங்களைச் செய்கிறவர்களுடைய ஜெபங்களைக் கடவுள் கேட்பதில்லை. உதாரணமாக, தன்னை வணங்குவதாகச் சொல்லிக்கொண்டு தனக்குக் கீழ்ப்படியாத சிலரிடம் கடவுள் இப்படிச் சொன்னார்: “உங்கள் கைகளில் இரத்தக்கறை படிந்திருக்கிறது. அதனால், . . . நீங்கள் எவ்வளவுதான் ஜெபம் செய்தாலும் நான் கேட்க மாட்டேன்.” (ஏசாயா 1:15) ஆனால், அவர்கள் தங்களுடைய வழிகளை மாற்றிக்கொண்டு, கடவுளோடு தங்களுக்கு இருந்த ‘பிரச்சினையைச் சரிசெய்திருந்தால்,’ கடவுள் அவர்களுடைய ஜெபத்தைக் கேட்டு பதிலளித்திருப்பார்.—ஏசாயா 1:18.